Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

சங்ககால இலக்கிய பிரதிகளை புரிந்துக்கொள்வோம்.



சங்ககால இலக்கிய பிரதிகளை புரிந்துக்கொள்வோம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடக்கம் இன்றைய சிறுகதை, நாவல், கவிதை வரையிலான எண்ணிக்கையற்ற பிரதிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. பிரதிகளை புரிந்துக் கொள்ளல் என்பது அண்மைக் காலங்களில் வந்த ஒரு சொல்லாடல் ( terminology) ஆகும்.


* பிரதிகளை எவ்வாறு புரிந்துக் கொள்வது....?

 குறித்த கால இலக்கிய பிரதிகளை புரிந்துக் கொள்வதற்கு குறித்த னக் காலத்தில் வாழ்ந்த பிரதிகளை புரிவர்கள் பல்வேறு உத்திமுறைகளையும் நுட்ப முறைகளையும் கையாண்டுள்ளனர்.

            உதாரணமாக: சங்க இலக்கியங்களுக்கும் இடைக்கால இலக்கியங்களுக்கும் உரை எழுதிய நச்சுனார்க்கினியர், தொல்காப்பியர், இளம்பூரணார் போன்றவர்கள்.

உலகப்பொதுமறையான திருக்குறளிற்கு உரை எழுதிய பரிமேழகர்,மடக்குவர் போன்றோயும் குறிப்பிடலாம்.

ஆனால், பிரதிகளை புரிந்துக் கொள்வது என்பது தற்காலத்தில் மாற்றமடைந்து வருகின்றதொன்றாகும்.

பிரதியொன்றினை ஒரு பார்வையில் மாத்திரம் பாராமல் பலரது பார்வைகளிலும், வேறுப்பட்ட கோணங்களில் இருந்தும் புரிந்துக் கொள்ளலாம் என்பது இன்றைய இலக்கிய உலகில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் ஒரு கோட்பாடாக காணப்படுகின்றது. இவ்விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும் போது தமிழ் முகாம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் சிறுவர் கதை ஒன்றினை நான் பார்த்த கண்ணோட்டமும் அவரின் கண்ணோட்டமும் அக்கதையினூடாக அவர் கூறிய கருத்தின் வேறுபாட்டிற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகின்றது.

தொடர்நது இதனையே அறிஞர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார்.

" ஆசிரியன் இறந்துவிட்டான் 

பிரதி வாழ்கின்றது.

பிரதிக்கு, வாசிப்போர் கொடுக்கின்ற விளக்கங்களில் தான் அந்தப் பிரதி வாழ்கின்றது."

இந்த  வகையில் நோக்கினால் ஆரம்ப கால காட்டுமிராண்டி நிலையிலிருந்து வேட்டையாடி, மந்தை மேய்த்து, விவசாயம் செய்து வணிக சமூகமாக மாறிய நிலைக்கு வந்திருக்கின்றது என்பதை அதனுடைய அகழ்வாரயர்களும் பண்டைய இலக்கியங்களும் கூறுகின்றன. இக்கூற்றானது உலகய்யிலுள்ள வாழும் எல்லா இனத்திற்கும் பொருந்தும் கோட்பாடாகும்.


சங்க இலக்கியத்தை ஆராய்ந்த மாபெரும் அறிஞர்கள் அதனை மூன்று காலமாக வகைப்படுத்துகின்றனர்..

1- புராதன காலம் 

      எழுத்துக்கள் தோன்றாத காலம் எனலாம்.சங்க காலத்தினுடைய ஆரம்ப உச்சம் என்றும் கூறலாம். 


எழுத்துக்கள் தோன்றா இக்காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற இலக்கியங்கள் எப்படி தோற்றம் பெற்றிருக்க முடியும்?

யார் இவ்விலக்கியங்களை படைத்திருக்கக்கூடும் என்ற ஐயம் எமக்குள் தோன்றிருக்கக்கூடும். இந்த இலக்கியங்களை படைத்தவர்கள் பாணர்களே ஆவர்.பாணர் எனப்படுவோர் யாரெனில் பாடல்களைப் பாடித்திரிந்தவர்களாவர்.இதுவே எமக்குரிய ஆரம்பக் கால முன்னோடியாகும். இதனையே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் வாய்மொழிப்பாடல்கள் என்றுக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்மொழிப்பாடல்கள் எனபது எமது தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு மட்டுமல்லாது எல்லா நாட்டு இலக்கிய வரலாற்றிற்கும் அடித்தளமாக அமைகிறது. ஆகவே, _அலைக்கடிகள்_ என அழைக்கப்படும் இப்பாணர்கள் எமது முன்னோடுகளாவர்.

( அலைக்குடிகள் என்றால் அலைந்துத் திரிபவர்கள் என்றுப் பொருள்.குழுவாகச் சென்று மக்களையும், மக்களின் வாழ்வியலையும் பாடி மக்களால் வழங்கப்படும் உணவுகளையுண்டு பாடித்திரிவார்கள்.

* மகாபாரதத்தை பாடியவர்கள் பாணர் கூட்டம் என்றும் வாழ்மீகிய இராமாயணத்தை பாடித்திராந்தவர்கள் லவ, குசன் என்றும் வாய்மொழிக்கதைகளும் உண்டு.)

இவர்களை கற்காத கவிஞர்கள் என்றும் கல்வி இல்லாதக் கவிஞர்கள், கல்லாவாய் கவிஞர்கள்/ கல்லா வாய் பாணர்கள் என்றும் அழைப்பர்.


     பின் நாகரீக வளர்ச்சி அடைகின்றோம்.வேட்டையாடுதல், மந்தை மேய்த்தல், குடும்பங்கள் தோன்றின, விவசாயம் மேற்கொள்ளப்பட்டது, தலைவர்கள் வந்தனர், அரசுகள் தோன்றின, நகரங்கள் வடிவமைக்கப்பட்டன, பெருவணிகர்கள் வருகின்றார்கள் ( கோவலன் போன்றோர்). எழுத்துமொழியும் தோன்றிற்று. வாய்மொழியாகப் பாடுவதை விடுத்து எழுத்தாக்கம் புரிவது சாலச்சிறந்தது என்ற சூழல் தோன்றியது.எனவே, பாணர் பெற்ற இடத்தை புலவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களை செந்நாப் புலவர்கள் என்ற பெயர் 

கொண்டு அழைப்பர் ( சிறந்த நாவண்மையை உடையோர்) பாணர்களால் பாடப்பட்ட பாடல்களையும் தாம் பாடிய பாடல்களையும் எழுத்துருவாக்கம் செய்கின்றனர்.இதுவே  பிற்காலத்தில் நாம் பதிணெண்மேல் கணக்கு நூல்கள் எனப்படும்  சங்க இலக்கியங்களாகும்.

        மூன்றாவதாக தோன்றியவர்கள் அறிஞர்கள் என்போராவர். பாணர் பாடுவான், புலவன் பார்த்துப்பாடுவான் எழுத்துருவாக்கம் புரிவான், ஆனால் அறிஞரோ அப்பாடல்களை உற்றுநோக்கி பகுத்து தொகுத்து அறிவுரையாக உரைப்பான்.அறிஞர்கள் தமக்கு கிடைக்கம் இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு இலக்கணங்களையும் அறநால்களையும் ஒழுக்கநூல்களையும் படைத்தனர்.இவர்கள் தத்தவ ஆசிரியர்களாகவும் விளங்கினர்.எனவே, சங்க இலக்கியத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் பாணர், புலவர், அறிஞர் என்ற பாகுபாட்டின் நுட்பத்தை புரிந்துக் கொள்ளவேண்டும். இந்நுட்பமானது சங்க இலக்கியத்தின் தார்பரியத்தை உணர்ந்து அவற்றை இரசித்து உள்வாங்குவதற்கான ஒரு திறவுக்கோலாகும்.


பாணர்கள் பாடிய வாய்மொழிப்பாடல்களும் புலவர்கள் பாடிய செய்யுட்களும் அறிஞர்கள் கூறிய கருத்தோவியங்கள் எல்லாமே தொகுக்கப்பட்டதா?  

இக்கேள்விக்குள்ளே மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான பல விடயங்கள் உள்ளடங்கி உள்ளன. இது ஒரு முறையியல் (Methodology) சார்ந்த வினாவாகும். ஒரு ஆசிரியர் என்ற வகையில் முறையியலின் இன்றியமையாமைப் பற்றிய தெளிவு அவசியமானதொன்றாகும்.

முறையியலை பொருத்தமட்டில் தரவுகளுக்கு அதிகளவான முக்கித்துவமளிக்கப்படுகின்றது. தரவுகளை அதிகளவு சேகரிக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையும் வழிக்காட்டலும் பேராசிரியர் மௌனகுரு sir அவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதாகும்.

     

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வினாவை நோக்குவோமானால் அனைத்து இலக்கியங்களும் தொடுக்கப்பட்டதா? என்ற வினாவை எழுப்பியவர் பேராசிரியர் கைலாசபதி மற்றும்  பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோராவார்.இதற்குரிய விடை அவர்களுடைய Phd ஆய்வின் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

அவையாவன:

 பேராசிரியர் கைலாசபதி - தமிழில் வீரயுக கவிதைகள் 

பேராசிரியர் சிவத்தம்பி - பண்டைய தமிழகத்தில் நாடகம் 


* இவை எப்போது தொகுக்கப்பட்டன?


* ஏன் தொகுக்கப்பட்டன?


* எவ்வாறு தொகுக்கப்பட்டன?


* எல்லாம் தொகுக்கப்பட்டனவா?


இவ்வினாக்களுக்கான விடைகளைத் 200 வருடகாலமாக ஆய்வுகள் நடந்தேறியுள்ளன. எனவே, 200 வருட கால ஆய்வு வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கான அவசியம் எமக்குள்ளது. இவ் ஆய்வு வரலாற்றில் பிரித்தானியரின் வருகை, அச்சு இயந்திரத்தின்  அறிமுகம்,தொகுக்கப்படுதல் என்பவற்றோடு அக்கால கல்வியன்றி அக்கால அரசியலும் பின்னணியில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. ( ஆராச்சியாளர்களும் இதன் தாக்கத்திற்குட்பட்டவர்களே.)


 ஆய்வாளர்களை பலவிதமாகப் பிரிக்கலாம்....


1 .அதீத தமிழ் உணர்வாளர்கள்.

2. சங்க இலக்கியத்தை மதத்தோடு இணைத்து முக்கியமாக சைவத்தோடு இணைத்து பார்க்கப் புறப்பட்டவர்கள்.

3.சங்க காலத்தை ஆராய்வு செய்தவர்கள். 

4.சங்க நூல் தொகுப்பை முதலும் முடிவும் என்று கொண்டு அதன் இலக்கியச் சிறப்பை ஆராய்ந்தவர்கள்.

5. பின்வந்த ஆய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியங்களை அணுகியவர்கள்.

    * மானுடவியல்

    * தொன்மவியல்

    *  சூழலியல் 

    *  குறியியல் 

7. சங்க கால இலக்கிய தொகுப்பை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அந்த தொகுப்பு சரியானது தானா? என ஆராய்ந்தவர்கள். 

8.

சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டதன் அரசியல் சமூக தேவை என்ன என ஆராந்தவர்கள்.

9.சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டப்போது ஏற்பட்ட  கருத்தியல், அரசியல் பின்னணிகளின் தாக்கத்தினால் அந்தத் தொகுப்பு சரியாக தொகுகக்ப்பட்டதா ஏதாவது இலக்கியங்கள் ஒதுக்கப்பட்டதா என ஆராய்ந்தவர்கள்.

10. ஒதுக்கப்பட்டவை எவை என ஆராய்ந்து அவற்றை வெளிக்கொணர்ந்தவர்கள். 

11. கூட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டதற்கான காரணங்களை கண்டு பிடித்தவர்கள்.


இக்கதையாடலிற்கூடாக நான் பெற்றவை....


சங்ககாலம் குறித்து உயர்தர கல்வியிலும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் பெற்ற அறிவைக்கொண்டு கலந்துக்கொண்ட எனக்கு இக்கலந்தரையாடலானது, சங்ககாலம், சங்ககால இலக்கியம் குறித்தும் பாரிய அறிவினைப் பெற்றுத்தந்துள்ளது எனலாம்.சங்க கால என்பதை பொற்காலமாக  போற்றி காதல் கொண்டு வீரம் பாடி பொய்யுரைக்கும் தமிழ்  பித்தர்களில் நானும் ஒருத்தி.

சங்க கால இலக்கியம்  குறித்த   குறுகிய அறிவிற்கு பல திருப்புமுனையாகவும் வியத்தகு  விவாதங்கள் மற்றும் தேடல்களின் பயன் பற்றியும் அறிந்தேன், வியந்தேன்.


இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின்/ குடும்பத்தின் வாழ்வியல்,  வாழ்க்கை முறையை பாடுவது என்ற பொருளைக் குறிக்கும் என்பர்.

எனவே, சங்ககால இலக்கியங்கள் சான்ய மக்களின் வாழ்வியலை பாடியுள்ளதா..?  பாடப்பட்டுள்ளதாயின் அவற்றிற்கான சான்றாதாரங்கள், 

இலக்கியங்களை வாழ்வியலினூடாக பார்க்க வேண்டுமா/ மொழியினூடாக பார்க்க வேண்டமா என்ற ஆசிரியரின் வேறுப்பட்ட பார்வைக்கான விளக்கங்கள்..

பேராசிரியர்.கைலாசபதி மற்றும் பேராசிரியர். சிவத்தம்பி பற்றிய  தேடல்களில் ஈடுபடுவதன் அவசியம்..

எந்தவொரு வரலாற்று ஆய்வினை விளங்கிக் கொள்வதற்கும் வரலாற்று ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கும் அதிகளவான வாசிப்பு மற்றும் திறந்த அறிவு இன்றியமையாததொன்றாகும்.

ஆய்வொன்றில்  கல்வி மட்டுமல்லாது அரசியலின் செல்வாக்கு...

இரவின் மடியில்  இனிய தமிழின் பெருமையினை  அறிவதற்கு  எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு....

இருநூறு வருடகால தமிழ் ஆய்வு வரலாற்றின்  எத்தனை தேடல்கள்  கோட்பாடுகள்...வாய்பாடாக இருக்கும் தமிழ் பற்றிய சில்கூற்றுகளை தகர்த்தி புதியதொரு பாதைக்கு வழிசமைத்துள்ளது என்பேன்.


( பேராசிரியர் திரு. சின்னையா மௌனகுரு அவர்களின் கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரையாகும்.)


அ.ரஞ்சிதா ( diploma in teaching )

செயலாளர் (அடையாளம் அரங்கம் )

கலமுதுன தமிழ் வித்தியாலயம்.

ranjithaaiyakannu14@gmail.com

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close